Thursday, September 11, 2014

பாரதி போற்றுவோம்

தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
என்னென்று சொல்வேன்.
                     பாரதிதாசன்

     ஆண்டு 1921. சென்னை திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி கோயில். கடந்த இரண்டு நாட்களாகவே, அக்கோயில் யானையின் குணம் மாறியிருந்தது. அமைதியின்றித் தவித்துக் கொண்டேயிருந்தது. யானையின் பாகன் கூட அருகில் செல்ல அச்சப்ட்டார்.

      கருப்பு கோட், இடையிலோ வெள்ளை வேட்டி, தலையிலோ முண்டாசு அணிந்த அவர், நெஞ்சம் நிமிர்த்தி, கம்பீரமாக, கையில் தேங்காய்ப் பழத்துடன் யானையினை நெருங்கினார். இக்கோயிலுக்கு வரும் பொழுதெல்லாம், யானைக்குத் தேங்காய் பழம் கொடுத்து மகிழ்ச்சி கண்டவர் இவர். இதோ இன்றும் தேங்காய் பழத்துடன் யானையை நெருங்குகிறார்.

     அந்த யானைக்கு மதம் பிடித்துள்ளது. அருகில் செல்ல வேண்டாம். அன்பர்கள் பலர் தடுத்தனர்.

     யானையும், யானும் நண்பர்கள். சக்தியின் வடிவாகவே யானையினைக் காண்பவன் நான். யானை எம்மை ஒன்றும் செய்யாது.

     யானையை நெருங்கினார்.

      கண்ணிமைக்கும் நேரத்தில், மதம் பிடித்த அந்த யானை, அம் மகா கவியை, தும்பிக்கையால் தூக்கி வீசியது. மேல்நோக்கி வீசப்பட்டவர், மீண்டும் யானையில் காலடியிலேயே விழுந்து மூர்ச்சையானார்.

காலா நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்
என யமனுக்கே சவால் விட்டவர், யானையின் காலடியில்.

     மதம் பிடித்த யானையின் அருகில் சென்று, அம் மாமனிதரைத் தூக்கக் கூட அஞ்சி, அனைவரும் விலகி நின்றே வேடிக்கைப் பார்த்தனர்.

     செய்தியறிந்த குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார். துணிந்து யானையின் அருகில் சென்று, காலருகே சுருண்டு கிடந்த, அம் மாமனிதரைத் தூக்கி வந்து மருத்துவ மனையில் சேர்த்தார்.

     இரண்டொரு நாளில் எழுந்து நடமாடினாலும், உடல் நிலை என்னவோ, நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே சென்றது.

     நண்பர்களே, இம்மாமனிதர்தான் மகாகவி பாரதி என்பதைத் தாங்கள் நன்கறிவீர்கள்.

         இளமையிலேயே, தனது பதினோராம் வயதிலேயே, ஈழக் கவி ஒருவரால் பாரதி என பட்டம் வழங்கிப் பாராட்டப் பெற்றவர் இவர்.

     இத்துனை சிறு வயதிலேயே பாரதி பட்டமா? குமுறினான், பொறாமையின் உச்சிக்கே சென்றான் ஒருவன். அவன் பெயர் காந்திமதி நாதன்.

     தம்பி, உன்னால், பாரதி சின்னப் பயல் என்று முடியுமாறு ஒரு கவி இயற்ற முடியுமா? அறைகூவல் விடுத்தான்.

காரது போல் நெஞ்சிருண்ட
காந்தி மதி நாதனைப்
பார் அதி சின்னப்பயல்

பாடினார் பாரதி. பாரதியைச் சின்னப் பயலாக நினைத்தவன், அதி சின்னப் பிள்ளையானான். வெட்கித் தலை குனிந்தான்.

       பாரதி, பாட்டுக் கொரு தலைவர் அல்லவா.
    

ஆங்கிலேய அரசு பிறப்பித்த ரௌலட் சட்டத்தை எதிர்த்து, ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய மகாத்மா காந்தி, அவ்வியக்கத்திற்கு ஆதரவு திரட்ட 1919 இல் சென்னைக்கு வந்தார். மூதறிஞர் இராஜாஜியின் வீட்டில் தங்கினார்.

     நாளேடுகளின் வழி, இச்செய்தியினை அறிந்த பாரதி, நேரே இராஜாஜியின் இல்லம் சென்று, காந்தியைச் சந்தித்தார்.

     எடுத்த எடுப்பிலேயே தன்னை, அறிமுகப் படுத்திக் கொண்டார்.

      நான் பாரதி. இன்று  கடற்கரையில், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். தாங்கள் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க வரமுடியுமா?

     காந்தி சிறிது யோசித்தார். பிறகு சொன்னார்.

      நீங்கள் நடத்தப் போகும் கூட்டத்தை, ஒரு நாள் தள்ளி வைத்துக் கொள்ளலாமே?

     எதற்காக ஒரு நாள் தள்ளி வைக்கச் சொல்லுகிறீர்?. விடவில்லை பாரதி.

     இன்று நான் வேறொரு கூட்டத்திற்குத் தலைமை ஏற்க வேண்டும். அதற்காகத்தான்.

     அப்படியென்றால் நீங்கள் அந்தக் கூட்டத்திற்குப் போங்கள். நான் எனது கூட்டத்திற்குப் போகிறேன். ஆனாலும், மிஸ்டர் காந்தி, நீங்கள் தொடங்கவிருக்கும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு, என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     பதிலுக்குக் கூட காத்திராமல், அடுத்த நொடி, கம்பீரமாய் எழுந்து வெளியே சென்று விட்டார் பாரதி.

    ஏதோ ஒரு புயலே அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

    பாரதி, அன்று, தான் நடத்திய கூட்டத்தில்தான், இப்பாடலைப் பாடினார்.

வாழ்கநீ எம்மான், இந்த
   வையத்து நாட்டி லெல்லாந்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி,
    விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
     பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
    மகாத்மாநீ வாழ்க வாழ்க.

    


இந்திய நாடு உண்மையான சுதந்திரம் பெற வேண்டுமானால், ஆண்களுக்கு இணையான மரியாதையினையும், உரிமையினையும் பெண்களும் பெற வேண்டும் என்று அன்றே வாதிட்டவர் பாரதி.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்

என்று கொதித்து எழுந்தவர் பாரதி.

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போமென்ற
    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்

என எள்ளி நகையாடியதும் பாரதிதான்.

பட்டங்கள் ஆள்வதும்
    சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
    நடத்த வந்தோம்

என்று முழங்கியதும் பாரதிதான். இது மட்டுமா,

அச்சமில்லை யச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து
    வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை யச்சமில்லை
    அச்சமென்ப தில்லையே

என்றும் வீறு கொண்டு முழங்கிய பாரதியின் உடல் நிலை, யானை தூக்கி வீசிய அன்றிலிருந்தே, மோசாமாகிக் கொண்டேதான் வந்தது. வயிற்றுக் கடுப்பு நோய் வேறு, தன் பங்கிற்குத் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது.

     மருத்துவர்கள் மருந்துகள் பல, கொடுத்தும், உண்ண மறுத்தே வந்தார்.

     மருந்துகள் உண்ண மறுப்பதைக் கண்டு வருந்திய, பாரதியின் மனைவியார், தன் மகள் சகுந்தலாவின் கையினால், மருந்து கொடுக்கச் சென்னார்.

     சகுந்தலா கொடுத்த மருந்தை, மறுக்காது குடித்த பாரதி, சகுந்தலா, என் அருமை மகளே, நீ மருந்தாக எனக்குக் கொடுத்தது, மருந்தில்லேம்மா, பார்லி கஞ்சி என்று கூறி, ஒரு கணம் கண் மூடியவர், அடுத்த நிமிடம், அருகிலிருந்த நண்பர்களைப் பார்த்துக் கூறினார்.

     அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி, ஆபீசுக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்.

     மகாகவி பாரதி கடைசியாகப் பேசிய வார்த்தைகள் இவைதாம். பின் பேசவேயில்லை. கண் திறக்கவும் இல்லை.

1921, செப்டம்பர் 11
மகாகவி பாரதி
இவ்வுலக வாழ்வு துறந்த நாள்.

நண்பர்களே, அந்நாள் இந்நாள்தான்.
செப்டம்பர் 11
பாரதியின் நினைவு நாள்.

     நண்பர்களே, சொல்வதற்கே, கூச்சமாக, அவமானமாக, வேதனையாக இருக்கிறது, தனது இறவாக் கவிதைகள் மூலம், சுதந்திர உணர்வினை ஊட்டி, மக்களின் நாடி, நரம்புகளை எல்லாம், முறுக்கேறச் செய்தானே, முண்டாசு முனிவன் பாரதி,

காக்கை குருவியெங்கள் சாதி நீள்
   கடலு மலையு மெங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை
   நோக்க நோக்க களியாட்டம்,

என்று காக்கைக் குருவிகளைக் கூட, தன் சாதியாகப் பாடினானே பாரதி, அம் மகாகவி பாரதி இறந்த பின், அவர் உடலில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையைவிட, இறுதி ஊர்வலத்தில், கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

     நண்பர்களே, பாரதியின் இறுதி ஊர்வலத்தில் இருபது பேர் கூட கலந்து கொள்ளவில்லை, என்பதுதான், வரலாறு சுட்டும் கசப்பான உண்மை.

நண்பர்களே,
மகாகவி பாரதியின் நினைவு நாளாம்
இந்நாளில்,
பாரதியை, அம் மகா கவியை
நாமாவது
போற்றுவோமா

பாரதி புகழ்

வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோமா.

32 comments:

  1. பாரதியின் வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பதிவிட்டுள்ளீர்கள். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Hi,
    Come and take Animated Gifs Free Images: flowers, nature, christmas, new year, thanksgiving, halloween, wallpapers, cursors, landscapes, animals, waterfalls, streams, fish aquariums, people, cars, sports, religion, sports, birds, butterflies, romantic, money ... very nice blogs. Enjoy!
    3D Animated Gifs
    Colțișor de Rai Gif
    Vilhelm

    ReplyDelete
  3. வாழும்போது வாழ்த்தும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததில்லை. பொறாமை கொண்டோர் காந்திமதிநாதன் போல் பாரதியின் கொள்கைகளை மதிக்கவில்லை. பாரதி இன்றிருந்தால் அவரை தூக்கிக் கொண்டாடியிருப்போம்

    ReplyDelete
  4. பாரதி புகழ் போற்றும் பதிவு அருமை..

    ReplyDelete
  5. கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழை நான் படித்திருக்கிறேன்.அருமையான இதழ். இன்றும் வருகிறதா? ஏனெனில் அதன் வாழ்நாள் உறுபபினராக பலமுறை முன்பு கடிதம் எழுதியுள்ளேன். பதில் வரவில்லை. செந்தமிழ்ச்செல்வியில் பல என் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பொழிலிலும் எழுத முயற்சித்தேன். உரிய தகவல் வராததால் ?
    தாங்கள் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர். தமிழ்ப் பொழில் இதழில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகள், சாதனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருவதாகப் படித்தேன். நான் எம்.ஏ.இவில் சிறப்பு தகுதி பெறுவதற்கு(1992)தமிழ்ப் பொழில் இதழும் ஒரு காரணம்.பாரதியார் குறித்த தங்கள் கட்டுரை தமிழின் நிலையையும்,தமிழரின் நிலையையும் பாரதி வாழ்க்கை மூலம் ஆராய்ந்துள்ளது.நல்ல பதிவு.வைதிகத்தின் வறண்ட பார்வைகொண்ட சிலரால்தான் பாரதி தான் வாழ்ந்த காலத்தில் போற்றப்படவில்லை.

    ReplyDelete
  6. ஐயாவணக்கம், குடும்பத்தோடுஅனைவரும்நலமா?
    தங்களின் கரந்தை மாமனிதர்கள் நூல் படித்தேன்
    தங்கப்பதக்கம்(தங்க பதக்கம்)நட்பின் ஆழம்,
    சிலப்பதிகாராதின் உண்மை அரிய படுபட்டு
    வாழ்ந்துகொண்டு இருக்கும் மகான் இதைப்படிக்கும்
    பொழுது சிலம்புப்பாதையை நாமும் பார்க்கவேண்டும்
    என்ற அவாவைத்தூண்டியது .

    மகாகவிபாரதியைஎந்நாளும் நாம் போற்றிப்புகழ்ந்திருப்போம்.
    என் நண்பன் எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது.
    பாரதி
    யானை மிதித்த
    முதல் சிங்கம்.

    ReplyDelete
  7. குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்
    தோழமையுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  8. அய்யா தாமதமாக தங்கள் வலைப்பக்கம் வந்தேன்.. அற்புதமான மகாகவியின் கம்பீரமான செயல்பாடுகள், நெகிழ்வான இறுதி நாட்கள், அபூர்வமான புகைப்படங்கள் என நிறைவான அஞ்சலியை செலுத்தி உள்ளீர்கள்.. நல்ல மனிதர்களை நல்ல உள்ளங்கள் நினைவு படுத்துவதுதனே சிறப்பு ...

    ReplyDelete
  9. அய்யா தாமதமாக தங்கள் வலைப்பக்கம் வந்தேன்.. அற்புதமான மகாகவியின் கம்பீரமான செயல்பாடுகள், நெகிழ்வான இறுதி நாட்கள், அபூர்வமான புகைப்படங்கள் என நிறைவான அஞ்சலியை செலுத்தி உள்ளீர்கள்.. நல்ல மனிதர்களை நல்ல உள்ளங்கள் நினைவு படுத்துவதுதனே சிறப்பு ...

    ReplyDelete
  10. சிறு தகவலாய் படித்த, அறிந்த பாரதியின் இறுதி நாட்களை, மிக விரிவாய் உருக்கமாய் பதிந்துள்ளீர்கள். மேலும் மிக அரிய புகைப்படங்கள் பதிவுக்கு பொலிவை தருகின்றன.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  11. பாரதியைப் பற்றிய ஆவனப்படம் பார்த்தது போல உள்ளது.

    ReplyDelete
  12. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  13. பாரதி வரலாறு அருமை

    ReplyDelete
  14. பாரதி வரலாறு அருமை

    ReplyDelete
  15. பாரதி வரலாறு அருமை

    ReplyDelete
  16. அன்புள்ள அய்யா,

    பாரதி போற்றுவோம்... அருமையாக அவரின் நினைவுகளைச் சொல்லியிருக்கின்றீர்கள்.

    யானையும், யானும் நண்பர்கள். சக்தியின் வடிவாகவே யானையினைக் காண்பவன் நான். யானை எம்மை ஒன்றும் செய்யாது- பாரதியின் நம்பிக்கை பொய்த்துப்போய் விட்டதே! இல்லையெனில் மகாகவி சுதந்திரதேவியைக் கண்டு களித்திருப்பான்.

    நீங்கள் அந்தக் கூட்டத்திற்குப் போங்கள். நான் எனது கூட்டத்திற்குப் போகிறேன்- காந்திக்காகக்கூட அல்ல யாருக்காகவும் காத்திருக்காத சுயமரியாதைக்காரன்.

    பாரதி, அன்று, தான் நடத்திய கூட்டத்தில்தான், ‘வாழ்கநீ எம்மான்’ இப்பாடலைப் பாடினார் என்று எண்ணுகின்ற பொழுது காந்தியை நேராக மட்டுமல்ல நிலையான பாடலாலும் வாழ்த்திய வாழும் பாடல்.

    சகுந்தலா கொடுத்த மருந்தை, மறுக்காது குடித்த பாரதி, சகுந்தலா, என் அருமை மகளே, நீ மருந்தாக எனக்குக் கொடுத்தது, மருந்தில்லேம்மா, பார்லி கஞ்சி என்று கூறி, ஒரு கணம் கண் மூடியவர்.

    கவிராஜன் கதையில் வைரமுத்து கூறியதைக் கோடிட்டு காட்டினீர்...

    அவன் உடம்பில் மொய்த்த
    ஈக்களின் எண்ணிக்கையில் கூட
    ஆட்கள் இல்லையே

    இது புலிகளை மதிக்காத
    புழுக்களின் தேசமடா

    உணரத் தெரியா
    ஊமைகளின் பூமியடா

    இனி மனிதர்க்கல்ல...
    நாற்சந்தியெங்கும் நாம்
    நாய்களுக்குச் சிலை வைப்போம்.

    நன்றி கற்கட்டும்
    நம்தேசம்.

    நன்றி.



    வாழ்கநீ எம்மான், இந்த
    வையத்து நாட்டி லெல்லாந்
    தாழ்வுற்று வறுமை மிஞ்சி,
    விடுதலை தவறிக் கெட்டுப்
    பாழ்பட்டு நின்ற தாமோர்
    பாரத தேசந் தன்னை
    வாழ்விக்க வந்த காந்தி
    மகாத்மாநீ வாழ்க வாழ்க.



    ReplyDelete
  17. அருமையான படைப்பு . பாரதியின் வாழ்கையை ஒற்றைப் பதிவில் அறிந்துவிட முடிகிறது

    ReplyDelete
  18. மகாகவியவர்களை நினைத்துப் பார்த்தாலே இனம் புரியாத பாசம், பற்று, உயிர்த்தோழர் என்ற நினைப்பு அகத்தில் ஊற்றெடுக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லையே என்ற ஏக்கம் தோன்றும். அருமையான பதிவு உருக்கமான விவரிப்புடன்...விழியோரம் கசிந்தது படிக்கும் போது... பகிர்வுக்கு மிகவும் நன்றி சகோதரா!

    ReplyDelete
  19. பாரதியின் பெருமையை உலகறிய செய்த தங்களை வாழ்த்துக்கின்றேன்.

    ReplyDelete
  20. பாரதி புகழ் வாழ்க வளர்க

    ReplyDelete
  21. பாரதி புகழ் வாழ்க வளர்க

    ReplyDelete
  22. ஓடி விளையாடு பாப்பா...எங்களை விளையாட விட்டீங்களா...ஒரு பிரியட் இருக்கிறதையும் சயன்ஸ் மிஸ்ஸுக்கோ மேத்ஸ் மிஸ்ஸுக்கோ தாரை வார்த்து..ஆனால் அங்கிள் உங்க வரிகள் அருமை...( நான் இப்படி சொல்லலாம் தானே??)

    ReplyDelete
  23. அருமையான மனிதனைப் பற்றிய அருமையான பதிவு சகோ

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. அய்யா, மகாகவி பற்றிய கட்டுரை மிகச் சிறப்பு. 2012 இல் எங்கள் ஊரில் பாரதி க்கு விடிய விடிய விழா எடுத்து பெரும் மகிழ்ச்சி கண்டேன். நன்றி.
    நட்பின் வழியில்
    சோலச்சி புதுக்கோட்டை

    ReplyDelete
  26. அய்யா, மகாகவி பற்றிய கட்டுரை மிகச் சிறப்பு. 2012 இல் எங்கள் ஊரில் பாரதி க்கு விடிய விடிய விழா எடுத்து பெரும் மகிழ்ச்சி கண்டேன். நன்றி.
    நட்பின் வழியில்
    சோலச்சி புதுக்கோட்டை

    ReplyDelete
  27. வாழ்க பாரதியின் புகழ்.

    செய்தி தொகுப்பும் அளித்தவிதமும் பாராட்டுக்குரியவை.

    கோ

    ReplyDelete
  28. சுவாரசியமான‌ கட்டுரை. //ஈழக் கவி ஒருவரால் பாரதி என பட்டம் வழங்கி// இது துவரை என் கருத்தில் பதிந்திராத‌ விடயம். நன்றி சகோதரரே!

    ReplyDelete
  29. நான் ஒரு பாரதி பித்தன் .... தங்கள் பதிவு அருமை.....

    ReplyDelete
  30. பாட்டுக்கொரு புலவன் பற்றிய அழகான பதிவு. படிக்க வெகு சுவாரஸ்யம் சகோ

    ReplyDelete
  31. சிறப்பான பதிவு

    ReplyDelete